வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூடான பிற்பகல்களில் குளிர்ந்த சோடா, பேக்கேஜ் செய்யப்பட்ட ஜூஸ் அல்லது வண்ணமயமான ஸ்போர்ட்ஸ் டிரிங்க்ஸ் போன்றவற்றை குடிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் ஏற்படும். முதலில் சர்க்கரைப் பானங்கள் புத்துணர்ச்சி தருவது போல தோன்றினாலும், அவை நமக்கு நன்மையைவிட தீமையையே அதிகம் செய்கின்றன என்பதை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை. மேலும், சிறிது நேரம் கழித்து உடலை இன்னும் அதிக தாகமாக உணரச் செய்யக்கூடும். அதிக சர்க்கரை உடலின் நீரிழப்பை சரிசெய்ய எந்த உதவியும் செய்யாது.
மாறாக, அதை செயலாக்க உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதால், நீரிழப்பை மேலும் அதிகரிக்கக்கூடும். அதோடு, பல செயற்கை பானங்களில் நார்ச்சத்து, அவசியமான ஊட்டச்சத்துகள் மற்றும் இயற்கையான நீர்ச்சத்து நன்மைகள் இல்லாததால், கோடைக்காலத்தில் உடலுக்குத் தேவையான ஆதரவை வழங்க முடியாது.
மறுபுறம், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் இயற்கையாகவும் திறமிக்க முறையி்லும் செயல்பட்டு, நீண்ட நேரம் தாகத்தைத் தணிக்க உதவுகின்றன. பெரும்பாலான பழங்களில் தண்ணீர், இயற்கை சர்க்கரை, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளதால், சர்க்கரைப் பானங்கள் தரும் திடீர் சோர்வின்றி உடலை குளிர்ச்சியாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்க உதவுகின்றன.
உடலை ஈரப்பதமாக வைத்திருக்க சிறந்த பழங்களைத் தேடுகிறீர்களானால், சர்க்கரைப் பானங்களைவிட சிறப்பாக புத்துணர்ச்சி தரும் நீர்ச்சத்து நிறைந்த 10 சிறந்த பழங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
ஏன் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் சர்க்கரைப் பானங்களைவிட சிறந்தவை?
கோடைக்காலத்தில் உடலின் நீர்ச்சத்து, செரிமானம், சரும ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் நிலையை மேம்படுத்த எளிய வழிகளில் ஒன்று, குளிர்பானங்களுக்கு பதிலாக அதிக நீர்ச்சத்து கொண்ட பழங்களை உணவில் சேர்ப்பதாகும். வெப்பமான காலநிலையில் இப்பழங்களைச் சாப்பிடுவது, வியர்வையின் மூலம் இழக்கும் திரவங்களையும் எலக்ட்ரோலைட்டுகளையும் மீட்டெடுக்க உதவுகிறது. நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடென்ட்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற உடலுக்குத் தேவையான பல சத்துகளையும் வழங்குகின்றன.
சோடா, பேக்கேஜ் செய்யப்பட்ட ஜூஸ் மற்றும் கஃபீன் கொண்ட பானங்களைப் போலல்லாமல், பழங்கள் கீழ்க்கண்ட நன்மைகளை வழங்குகின்றன:
• உடலை இயற்கையாக ஈரப்பதமாக வைத்திருக்க உதவும்
• செரிமானத்தையும் குடல் ஆரோக்கியத்தையும் ஆதரிக்கும்
• சருமத்தை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்
• வெப்பத்தால் ஏற்படும் சோர்வைக் குறைக்கும்
• செயற்கை சர்க்கரை இல்லாதவை
• ஆற்றல் நிலையை சீராக வைத்திருக்க உதவும்
கோடைக்காலப் பழங்களை தினசரி உணவில் சேர்ப்பது உடலை இயற்கையாக குளிர்வித்து, நீர்ச்சத்தை அதிகரித்து, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
தர்பூசணி: கோடைக்காலத்தின் சிறந்த நீர்ச்சத்து பழம்
உடலை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும் சிறந்த பழங்களில் ஒன்றான தர்பூசணியில் சுமார் 92% தண்ணீர் உள்ளது. இது வைட்டமின் C, வைட்டமின் A, பொட்டாசியம் மற்றும் இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடைய சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்டான லைகோபீனையும் வழங்குகிறது. சர்க்கரை நிறைந்த குளிர் பானங்களைப் போலல்லாமல், தர்பூசணி இயற்கையாகவே இனிப்பு ஆசையை பூர்த்தி செய்யும் ஆனால், சோர்வை ஏற்படுத்தாது. குளிரவைத்த தர்பூசணி துண்டுகள் அல்லது உறையவைத்த துண்டுகள் குறைந்த கலோரி கொண்ட சிறந்த கோடைக்கால சிற்றுண்டியாகும்.
கிவி: ஊட்டச்சத்து நிறைந்த நீர்ச்சத்து பழம்
கிவியில் சுமார் 83% தண்ணீர் உள்ளது. மேலும் இது வைட்டமின் C, வைட்டமின் E, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றால் நிறைந்துள்ளது. இதன் இனிப்பு-புளிப்பு சுவை, செயற்கை சுவையூட்டப்பட்ட பானங்களுக்கு ஆரோக்கியமான மாற்றாக அமைகிறது. கிவியில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுவதோடு, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வையும் தருகிறது. கிவி துண்டுகளை தயிர், ஸ்மூத்தி அல்லது பழக் கலவைகளில் சேர்த்தும் சாப்பிடலாம்.
ஸ்ட்ராபெர்ரி: ஆன்டிஆக்ஸிடென்ட்கள் நிறைந்த நீர்ச்சத்து பழம்
சுமார் 91% நீர்ச்சத்து கொண்ட ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் C, மாங்கனீஸ், ஆன்டிஆக்ஸிடென்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. சர்க்கரை நிறைந்த பெர்ரி பானங்களைவிட, ஃப்ரெஷான ஸ்ட்ராபெர்ரி உடலுக்குத் தேவையான சத்துகளையும் நீர்ச்சத்தையும் அளித்து உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்கள் சரும ஆரோக்கியத்தையும் வெப்பம் மற்றும் மாசு காரணமான ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் உதவலாம்.
முலாம்பழம்: வெப்பமான காலநிலைக்கு குளிர்ச்சியளிக்கும் பழம்
கேன்டலூப் என்றும் அழைக்கப்படும் முலாம்பழத்தில் சுமார் 90% தண்ணீர் உள்ளது. இதனுடன் வைட்டமின் A, வைட்டமின் C மற்றும் பொட்டாசியமும் கிடைக்கின்றன. இது இயற்கையாகவே இனிப்பாகவும் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் இருந்து, பேக்கேஜ் செய்யப்பட்ட மாம்பழப் பானங்களைவிட எளிதாக செரிக்கக்கூடியதாக உள்ளது. பொட்டாசியம் நிறைந்த முலாம்பழம், கோடைக்கால நீரிழப்பின் போது எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
பீச் பழம்: இயற்கையாக சாறும் புத்துணர்ச்சியும் தரும் பழம்
பீச் பழத்தில் சுமார் 89% தண்ணீர் உள்ளது. மேலும் வைட்டமின் A, வைட்டமின் C மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை வழங்குகிறது. இதன் சாறான அமைப்பும் மென்மையான இனிப்பும், சர்க்கரை நிறைந்த ஐஸ்டீ மற்றும் டின் பானங்களுக்கு ஆரோக்கியமான மாற்றாக அமைகிறது. வெப்பமான சூழலில் வெளியே இருந்த பிறகு குளிரவைத்த பீச் பழம் மிகவும் புத்துணர்ச்சியளிக்கக்கூடும்.
ஆரஞ்சு: பாரம்பரிய சிட்ரஸ் நீர்ச்சத்து பழம்
ஆரஞ்சில் சுமார் 87% தண்ணீர் உள்ளது. இது வைட்டமின் C, பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றை வழங்குகிறது. முழுப் பழமாக ஆரஞ்சை சாப்பிடுவது, பேக்கேஜ் செய்யப்பட்ட ஆரஞ்சு ஜூஸைவிட சிறந்தது. ஏனெனில் அதிலுள்ள நார்ச்சத்து, சர்க்கரை உடலில் உறிஞ்சப்படுவதை மெதுவாக்குகிறது. ஆரஞ்சு, செயற்கை சிட்ரஸ் பானங்களைவிட ஆரோக்கியமானதும் வயிறு நிரம்பிய உணர்வையும் தரக்கூடியதுமாகும்.
அன்னாசிப்பழம்: செரிமானத்திற்கு உதவும் வெப்பமண்டலப் பழம்
அன்னாசிப்பழத்தில் சுமார் 86% தண்ணீர் உள்ளது. மேலும் வைட்டமின் C, மாங்கனீஸ் மற்றும் செரிமானத்திற்கு உதவக்கூடிய பிரோமேலின் எனும் என்சைமையும் உள்ளது. கஃபீன் மற்றும் செயற்கை பொருட்கள் நிறைந்த எனர்ஜி டிரிங்க்ஸ்களைப் போலல்லாமல், அன்னாசிப்பழம் இயற்கையாக புத்துணர்ச்சி தருவதோடு, உணவுக்குப் பிறகு ஏற்படும் வயிற்றுப் புடைப்பையும் குறைக்க உதவலாம்.
திராட்சை: இயற்கையான இனிப்பும் நீர்ச்சத்தும் நிறைந்த பழம்
திராட்சையில் சுமார் 81% தண்ணீர் உள்ளது. அதோடு பாலிஃபெனால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடென்ட்கள், வைட்டமின் K மற்றும் காப்பர் ஆகியனவும் உள்ளன. இதன் இயற்கையான இனிப்பு, இனிப்புப் பானங்கள் மற்றும் சர்க்கரை நிறைந்த ஸ்நாக்ஸ்களுக்கான ஆசையைக் குறைக்க உதவும். உறையவைத்த திராட்சை, கோடைக்காலத்தில் ஐஸ் லாலிபாப்களுக்கு ஆரோக்கியமான மாற்றாக அமையும்.
பப்பாளி: செரிமானத்திற்கு உதவும் நீர்ச்சத்து பழம்
85% தண்ணீர் கொண்ட பப்பாளி, வைட்டமின் C, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் A ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் செரிமானத்திற்கு உதவும் என்சைம்களும் இதில் உள்ளன. கனமான உணவுகளுக்குப் பிறகு குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்க இது உதவலாம். பேக்கேஜ் செய்யப்பட்ட வெப்பமண்டலப் பானங்களில் இருக்கும் அதிக சர்க்கரையின்றி, பப்பாளி இயற்கையான இனிப்பையும் நீர்ச்சத்தையும் வழங்குகிறது.
ஹனிடியூ முலாம்பழம்: அதிகம் கவனிக்கப்படாத நீர்ச்சத்து பழம்
ஹனிடியூ முலாம்பழத்தில் சுமார் 90% தண்ணீர் உள்ளது. மேலும் பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் C மற்றும் B வகை வைட்டமின்களையும் வழங்குகிறது. இதன் மிதமான இனிப்பு, அதிகமாக இல்லாமல் புத்துணர்ச்சியளிக்கிறது. வெப்பமான சூழல் அல்லது வெளிப்புற செயல்பாடுகளுக்குப் பிறகு இப்பழம் உடலின் திரவங்களை இயற்கையாக நிரப்ப உதவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எந்தப் பழங்களில் அதிக அளவு தண்ணீர் உள்ளது?
தர்பூசணி, வெள்ளரிக்காய், ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு மற்றும் முலாம்பழம் போன்ற பழங்களில் 80% க்கும் அதிகமான தண்ணீர் உள்ளது. இப்பழங்கள் வெப்பமான காலநிலையில் உடலை இயற்கையாக ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகின்றன.
நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் ஏன் சர்க்கரைப் பானங்களைவிட ஆரோக்கியமானவை?
நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடலுக்கு நீர்ச்சத்து அளிப்பதுடன் சேர்த்து வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடென்ட்கள் மற்றும் நார்ச்சத்தையும் வழங்குகின்றன. சர்க்கரைப் பானங்களைப் போலல்லாமல், இவை குறைந்த செயற்கை சர்க்கரையைக் கொண்டிருப்பதுடன், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஆதரிக்கின்றன.
எந்தப் பழத்தில் அதிக நீர்ச்சத்து உள்ளது?
சுமார் 92% தண்ணீர் கொண்ட தர்பூசணி, அதிக நீர்ச்சத்து கொண்ட பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது உடலை ஈரப்பதமாக வைத்திருப்பதோடு, ஆன்டிஆக்ஸிடென்ட்களையும் இயற்கையான இனிப்பையும் வழங்குகிறது.
நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடல் எடை மேலாண்மைக்கு உதவுமா?
ஆம். நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் பொதுவாக கலோரி குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் தண்ணீர் அதிகமாகவும் இருக்கும். இதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு, அதிகமாக சாப்பிடுவதைக் குறைக்க உதவுகிறது.
நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துமா?
ஆம். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் சரும ஈரப்பதத்தை பராமரிக்கவும், ஆரோக்கியமான தோற்றமுள்ள சருமத்தை ஆதரிக்கவும் உதவலாம். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சுற்றுச்சூழல் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.
கோடைக்காலத்தில் பழங்கள் சாப்பிடும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டாம்
ஆரோக்கியமான பழங்களிலும் இயற்கை சர்க்கரை உள்ளது. ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது வயிற்றுப் புடைப்பு, வயிற்று அசௌகரியம் அல்லது இரத்த சர்க்கரை திடீர் உயர்வை ஏற்படுத்தலாம்.
சாப்பிடுவதற்கு முன் பழங்களை நன்றாக கழுவவும்
ஸ்ட்ராபெர்ரி, திராட்சை போன்ற பச்சையாக சாப்பிடப்படும் பழங்களை குறிப்பாக நன்றாக கழுவி, அழுக்கு, பூச்சிக்கொல்லி மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் அளவை கவனிக்க வேண்டும்
பழங்கள் ஆரோக்கியமானவை என்றாலும், தர்பூசணி, திராட்சை மற்றும் அன்னாசிப்பழம் போன்ற சில பழங்களில் இயற்கை சர்க்கரை அளவு அதிகமாக இருக்கலாம். எனவே நீரிழிவு நோயாளிகள் இவற்றை அளவோடு சாப்பிட வேண்டும். தேவையானால் மருத்துவரை அணுகவும்.
முழுப் பழங்களை சாப்பிடுங்கள்; பேக்கேஜ் ஜூஸ்களை தவிர்க்கவும்
பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகளில் கூடுதல் சர்க்கரை மற்றும் குறைந்த ஊட்டச்சத்துகள் இருக்கலாம். ப்ரெஷான முழுப் பழங்களைச் சாப்பிடுவது சிறந்த நீர்ச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீண்ட நேர நிறைவு உணர்வை வழங்கும்.
வெட்டிய பழங்களைச் சரியாக சேமிக்கவும்
வெட்டிய பழங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, சில மணி நேரங்களுக்குள் சாப்பிட வேண்டும். குறிப்பாக அதிக வெப்பமான காலநிலையில், பாக்டீரியா வளர்ச்சியும் ஊட்டச்சத்து இழப்பும் தவிர்க்கப்படலாம்.
முடிவு
பேக்கேஜ் செய்யப்பட்ட பானங்கள் தற்காலிக புத்துணர்ச்சி தரலாம். ஆனால் ஃப்ரெஷான பழங்களில் கிடைக்கும் நீர்ச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்களுக்கு ஈடாக அவை இருக்க முடியாது. பெரும்பாலான சர்க்கரைப் பானங்களில் அதிக சர்க்கரை, செயற்கை சுவைகள் மற்றும் மிகக் குறைந்த ஊட்டச்சத்துகள் மட்டுமே உள்ளன.
சர்க்கரைப் பானத்திற்கு பதிலாக நீர்ச்சத்து நிறைந்த பழங்களைச் சாப்பிடுவது, உடலின் நீர்ச்சத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை ஆதரிக்கவும், சரும ஆரோக்கியத்தை பராமரிக்கவும் மற்றும் வெப்பமான கோடைக்கால நாட்களில் நிலையான ஆற்றலை வழங்கவும் உதவும். இந்தக் கோடையில் சர்க்கரைப் பானங்களைவிட இயற்கையான நீர்ச்சத்து தருபவற்றைத் தேர்வு செய்து, ஃப்ரெஷான பழங்களால் உடலை குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருங்கள்.
